Wednesday, August 5, 2009

ஆமத்தூர்

நம்ம இப்ப இருக்குறது விருதுநகர் பேருந்து நிலையம். இதோ வருது பாருங்க சிவகாசி போற 3ம் எண் பேருந்து... வாங்க ஏறலாம்.. ஏறியாச்சா.. ஜன்னல் சீட்டுல உக்காந்துக்கோங்க.... இன்னும் 15 நிமிசப் பயணத்துல ஊருக்குப் போய்ச் சேந்துரலாம்..

இதோ இது தான் குமாரலிங்கபுரம்.. இதைத் தாண்டினா 2 நிமிசத்துல கவலூர் வந்துரும்.
இதோ கவலூரைத் தாண்டீட்டோம். சாலையின் இரு புறத்திலும் ஒரு திடீர் மாற்றம் தெரியுதா... ஆமாம்... நம்ம இப்ப ஆமத்தூர் எல்லைக்கு வந்துட்டோம்...

சாலையின் இரு புறத்திலும் பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள். பெரும்பாலும் நெற்பயிர்கள்.. இடையிடையே சில வயல்களில் பாசிப்பயறு, உளுந்து போன்ற தானியங்கள். சில வயல்களில் பருத்தி போன்ற பணப் பயிர்கள்.. சிலவற்றில் பூத்துக் குலுங்கும் சூரிய காந்தி. வயல்களில் பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் இளம் பெண்டிரும் இளையரும்.

சாலையின் இடதுபுறத்தில் ஊரைஒட்டி ஒரு பெரிய குளம். குளக்கரையில் மிகப் பெரிய ஆலமரம் ஒன்று. குளத்தைச் சுற்றிலும் வேம்பு, புளி எனப் பலதரப்பட்ட மரங்கள். போனவாரம் பெய்த மழையில் குளம் நிரம்பி வழிகிறது. குளத்தில் பூத்துக் குலுங்கும் தாமரை மற்றும் அல்லி மலர்கள்.

குளத்தின் அருகே ஒரு நந்தவனம். நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் மலர்கள்.. முல்லை, மல்லி, நந்தியாவட்டை, பிச்சி, ரோஜா, கேந்தி, செவ்வந்தி, வாடாமல்லி எனப் பலதரப்பட்ட மலர்கள். நந்தவனத்தின் நடுவே ஒரு முருகன் கோயில்.

குளத்தில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள். குளக்கரையில் அமர்ந்து அறுவடை பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பெரியவர்கள். அரசியல் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள்.

அந்த இளைஞர்களைக் கிண்டல் அடித்துக்கொண்டே குளக்கரையில் இருக்கும் அடி குழாயில் நீர் எடுக்க வந்து கொண்டிருக்கும் இளம் பெண்கள். இதைத் தெரிந்தும் தெரியாதது போல் ரசித்துக்கொண்டே தம் பேச்சுக்களைத் தொடரும் இளையர்கள்.

குளத்தை தாண்டியதும் சிறிது தூரத்தில் பேருந்து நிறுத்தம். பேருந்து நிறுத்தத்தை ஒட்டி ஒரு பெரிய கடைவீதி. கடை வீதியைத் தாண்டியதும் அகலமான தெருக்கள். வீடுகளின் முற்றத்தில் தானியங்களை உலர வைத்துக் கொண்டிருக்கும் பெண்டிர். தானியங்களைக் கொத்த வரும் பறவைகளை, பாவம் சாப்பிட்டுப் போகட்டும் என்று துரத்தாமல் விடும் பெண்டிர்."

ம்ம்ம்ம்ம்...... இப்படியெல்லாம் சொல்லனுமின்னு எனக்கும் ஆசைதான். ஆனா எங்க ஊரு ஒன்னும் தஞ்சாவூர் பக்கத்துல இல்லையே... பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில இல்ல இருக்கு. இருந்தாலும் "காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு" ஆச்சே... அதனால எங்க ஊரைப் பத்தி சொல்லப் போறேன் இந்தத் தொடரில்.

அடுத்த பகுதி விரைவில்...

***********************************************************************************
ஒரு விளம்பரம்..

சிங்கை பதிவர்கள் அனைவரும் சேர்ந்து "பதிவர்களை டரியலாக்கும்" தலைப்புகளுடன் ஒரு கட்டுரைப் போட்டி நடத்துவது அனைவரும் அறிந்ததே... போட்டிக்கான உங்கள் ஆக்கங்களை அனுப்ப இறுதி நாள் ஆகஸ்டு-15. அதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது.. எனவே உங்கள் ஆக்கங்களை விரைவில் அனுப்பவும்.

நானும் ஒரு பரிசு அறிவிக்கலாமின்னு இருக்கேன்.. மணற்கேணி-2009 போட்டியில் வெல்லும் முதல் 3 நபர்களுக்கு, நான் ஒரு கிழமை(வாரம்) காலம் ஆமத்தூரைச் சுற்றிக் காட்டுகிறேன். பயணம், உணவு & உறைவிடச் செலவுகள் அனைத்தும் நான் ஏற்றுக் கொள்கிறேன்..

மணற்கேணி போட்டியில் வெற்றி பெறுவோர், தங்களது கடவுச்சீட்டு விவரங்களை எனக்கு அனுப்பினால் ஆமத்தூர் செல்ல விசா ஏற்பாடு செய்யப்படும்...

ஆமத்தூர் வர நீங்க செய்யவேண்டியதெல்லாம்....
"மணற்கேணி போட்டியில் கலந்துகொள்ளுங்கள் & வெல்லுங்கள்... போனசாக உங்களுக்கு ஒரு கிழமை சிங்கை பயணமும் கிடைக்குதே.... "