Showing posts with label நுண்ணரசியல். Show all posts
Showing posts with label நுண்ணரசியல். Show all posts

Sunday, September 28, 2008

காளான் குழம்பு! - செய்முறை

காளான் குழம்பு! - செய்முறை

தேவையான பொருட்கள்:

சிறிது சிறிதாக அல்லது நடுத்தரமாக அல்லது பெரிதாக வெட்டிய காளான் - 1பாக்கட்.


பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி - 2


பொடிப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1


நறுக்கிய வெள்ளைப்பூண்டு -1


மிளகாய்ப் பொடி அல்லது மீன் மசாலா அல்லது கோழி மசாலா - தேவையான அளவு


மக்காச்சோள எண்ணை - தேவையான அளவு


உப்பு, கறிவேப்பிலை, மஞ்சள்பொடி - தேவையான அளவு

செய்முறை
குக்கரில்(ப்ரஸ்ஸர் பேனின் விசில் தேடி எடுக்கமுடிந்தால் ப்ரஸ்ஸர் பேன் பயன்படுத்தலாம்) கொஞ்சம் எண்ணை விட்டு ஸ்டவ்வில் வைக்கவும்.

எண்ணெய் சூடானதும், கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்து முடிந்ததும் கறிவேப்பிலை போடவும்.

கறிவேப்பிலை வெடித்து முடித்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.


வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.


தக்காளி வதங்கியதும் காளான் சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்கவும்.
பின் மிளகாய்ப்பொடி, மஞ்சள், உப்பு சேர்த்து மசால் வாசம் போகும்வரை வதக்கவும்.

மசால் வாசம் போகும்வரை வதக்கியதும், 1/2 டம்ளர் நீர் சேர்த்து குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வைக்கவும்.


இடைப்பட்ட நேரத்தில் எலக்ட்ரிக் குக்கரில் 1 டம்ளர் அரிசி வைக்கவும்.

3 விசில் வந்ததும் ஸ்ட்டவ்வை அனைத்துவிட்டு, ஆவி முழுதும் வெளியேறும் வரை காத்திருந்து குக்கரைத் திறந்தால் காளான் குழம்பு தயார்.



சோறு தயாராக எப்படியும் ஒரு 15 நிமிடம் ஆகும்.. அதற்குள் குளித்து முடித்துவிட்டு வந்துவிடவும்.

இன்று மாலை முஸ்தபாவில் வாங்கப் போகும் பில்ஸ்பெரி ரெடிமேட் சப்பாத்திக்கும் இந்தக் குழம்பு நன்றாக இருக்கும்!

குறிப்புகள் சில:

குழம்பு நன்றாக இருந்தால் 2 நாட்கள் வைத்திருந்து சாப்பிடவும். நன்றாக இல்லையெனில், கோவியார், பாரி.அரசு போன்ற நல்லவர்களைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டு உடனே குழம்பைக் காலி செய்துவிடவும்.

இந்த இடுகையை யார் வேண்டுமானாலும் மீள் பதிவு செய்து கொள்ளலாம். மீள் பதிவு செய்வோர் தயவு செய்து எங்கும் என் பெயரையோ அல்லது இந்த இடுகைக்கான தொடுப்பையோ சேர்த்துவிட வேண்டாம்..

இந்தக் குழம்பை யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால் செய்யத் தொடங்கும் முன் இங்கு வந்து நன்றி சொல்லிப் பின்னூட்டமிட்டுச் செல்லவேண்டும்

நீங்கள் சமைத்த குழம்பு நன்றாக இருந்தால் அதற்குறிய பாராட்டுக்கள் அனைத்தும் எனக்கே. ஆனால் நன்றாக இல்லையெனில், அது உங்களின் கவனக்குறைவால் மட்டுமே இருக்கும். எனவே விழும் திட்டுக்கள் அனைத்தும் உங்களுக்கே!

இந்த இடுகையில் இருக்கும் நுண்ணரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான காளான் குழம்பு பரிசாக வழங்கப் படும்.

Saturday, September 27, 2008

முட்டைக்கோஸ் சாம்பார்! - செய்முறை

முட்டைக்கோஸ் சாம்பார்

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு
- அம்மா ஊருக்குப் போகும் முன் வாங்கி வைத்ததில் மீதமுள்ள 1/2 டம்ளர்.
முட்டைக்கோஸ் - போன வாரம் fired-rice க்கு வாங்கிய முட்டைக்கோஸில் மீதமுள்ளது.(சிறியதாக வெட்டி வைக்கவும்)
தக்காளி -2(சிறியதாக நறுக்கி வைக்கவும்)
சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
கடுகு (வீட்டில் உளுந்தம் பருப்பு இருந்தால் அதுவும்) - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணை - தேவையான அளவு
மஞ்சள் பொடி - தேவையான அளவு
உப்பு - எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு(சோறு ஆக்கும்போது உப்பு போடாவிட்டால், குழம்பில் அதிக உப்பு சேர்க்கனும்)
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
_____________________________


செய்முறை:

பருப்பையும் முட்டைக்கோஸையும் நன்கு கழுவி, மஞ்சள் சேர்த்து, குக்கரில் 2 டம்பளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும்வரை வேக வைக்கவும்.(பொங்காமல் இருக்க 2 சொட்டு நல்லெண்ணை சேர்க்கனும்ன்னுறது எல்லாருக்கும் தெரியும் என்பதால் அதை நான் சொல்லவில்லை..)

பருப்பு வேகும் சமயத்தில் தக்காளி, வெங்காயம் எல்லாம் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
வானலியில் தேவையான எண்ணை விட்டு எண்ணை காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்து முடிந்ததும் கரிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வறுபட்டதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும், குக்கரில் இருக்கும் பருப்பு -முட்டைக்கோசை அப்படியே நீருடன் எடுத்து வானலியில் ஊற்றவும்.

உப்பு, சாம்பார் பொடி(fridgeல் இருக்கும் சாம்பார், மீன், கோழி மசாலாக்களில் எது சாம்பார் மசாலா என்று சரியாகப் பார்த்து எடுக்கவும்) சேர்த்து நன்கு கலக்கவும்.

இதை அப்படியே ஒரு 10 நிமிடம் ஸ்டவ்வை ஸ்லிம்மில் வைத்துக் கொதிக்கவிடவும்.

சாம்பார் கொதித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பருப்பு வைத்த குக்கர், காய்கறி வெட்டிய தட்டு, கத்தி, நேற்று இரவு சாப்பிட்ட தட்டு அனைத்தையும் கழுவிக் காய வைக்கவும்.

ஒகே.... சாம்பார் ரெடி.


சாம்பார் தயாரானதும் ஒரு டம்ளர் அரிசி எடுத்து கழுவி, டம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கர் பாத்திரத்தின் வெளிப்புறத்தை கைலி அல்லது துண்டின் உதவியுடன் நன்கு துடைத்து எலக்ட்ரிக் குக்கரில் வைத்து குக்கரை ஆன் செய்யவும்.

சோறு தயாராக ஒரு 20 நிமிடம் ஆகும். அந்த நேரத்தில் சமையலறையைச் சுத்தம் செய்து, நேற்று இரவு சாப்பிட்ட சாப்பாட்டு பொட்டலம் மற்றும் மற்ற குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்து குளித்து விட்டு வரவும்.

குளித்து விட்டு வந்தால் சோறு தயாராக இருக்கும். குக்கரை ஆப் செய்துவிட்டு சாப்பிட ஆரம்பிக்கவும்!


தொட்டுக்கொள்வதற்கு முந்தாநாள் இரவு சப்பாத்திக்கு வைத்த தக்காளித் தொக்கை சுடவைத்து வைத்துக் கொள்ளவும்.

குறிப்புகள் சில:
இந்த இடுகையை யார் வேண்டுமானாலும் மீள் பதிவு செய்து கொள்ளலாம். மீள் பதிவு செய்வோர் தயவு செய்து எங்கும் என் பெயரையோ அல்லது இந்த இடுகைக்கான தொடுப்பையோ சேர்த்துவிட வேண்டாம்..

இந்தக் குழம்பை யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால் செய்யத் தொடங்கும் முன் இங்கு வந்து நன்றி சொல்லிப் பின்னூட்டமிட்டுச் செல்லவேண்டும்

நீங்கள் சமைத்த குழம்பு நன்றாக இருந்தால் அதற்குறிய பாராட்டுக்கள் அனைத்தும் எனக்கே. ஆனால் நன்றாக இல்லையெனில், அது உங்களின் கவனக்குறைவால் மட்டுமே இருக்கும். எனவே விழும் திட்டுக்கள் அனைத்தும் உங்களுக்கே!

இந்த இடுகையில் இருக்கும் நுண்ணரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான முட்டைக்கோஸ் சாம்பார் பரிசாக வழங்கப் படும்.