முட்டைக்கோஸ் சாம்பார்தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - அம்மா ஊருக்குப் போகும் முன் வாங்கி வைத்ததில் மீதமுள்ள 1/2 டம்ளர்.
முட்டைக்கோஸ் - போன வாரம் fired-rice க்கு வாங்கிய முட்டைக்கோஸில் மீதமுள்ளது.(சிறியதாக வெட்டி வைக்கவும்)
தக்காளி -2(சிறியதாக நறுக்கி வைக்கவும்)
சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
கடுகு (வீட்டில் உளுந்தம் பருப்பு இருந்தால் அதுவும்) - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணை - தேவையான அளவு
மஞ்சள் பொடி - தேவையான அளவு
உப்பு - எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு(சோறு ஆக்கும்போது உப்பு போடாவிட்டால், குழம்பில் அதிக உப்பு சேர்க்கனும்)
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
_____________________________
செய்முறை:பருப்பையும் முட்டைக்கோஸையும் நன்கு கழுவி, மஞ்சள் சேர்த்து, குக்கரில் 2 டம்பளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும்வரை வேக வைக்கவும்.(பொங்காமல் இருக்க 2 சொட்டு நல்லெண்ணை சேர்க்கனும்ன்னுறது எல்லாருக்கும் தெரியும் என்பதால் அதை நான் சொல்லவில்லை..)
பருப்பு வேகும் சமயத்தில் தக்காளி, வெங்காயம் எல்லாம் வெட்டி வைத்துக்கொள்ளவும்.
வானலியில் தேவையான எண்ணை விட்டு எண்ணை காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்து முடிந்ததும் கரிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வறுபட்டதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், குக்கரில் இருக்கும் பருப்பு -முட்டைக்கோசை அப்படியே நீருடன் எடுத்து வானலியில் ஊற்றவும்.
உப்பு, சாம்பார் பொடி(fridgeல் இருக்கும் சாம்பார், மீன், கோழி மசாலாக்களில் எது சாம்பார் மசாலா என்று சரியாகப் பார்த்து எடுக்கவும்) சேர்த்து நன்கு கலக்கவும்.
இதை அப்படியே ஒரு 10 நிமிடம் ஸ்டவ்வை ஸ்லிம்மில் வைத்துக் கொதிக்கவிடவும்.
சாம்பார் கொதித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பருப்பு வைத்த குக்கர், காய்கறி வெட்டிய தட்டு, கத்தி, நேற்று இரவு சாப்பிட்ட தட்டு அனைத்தையும் கழுவிக் காய வைக்கவும்.
ஒகே.... சாம்பார் ரெடி.

சாம்பார் தயாரானதும் ஒரு டம்ளர் அரிசி எடுத்து கழுவி, டம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கர் பாத்திரத்தின் வெளிப்புறத்தை கைலி அல்லது துண்டின் உதவியுடன் நன்கு துடைத்து எலக்ட்ரிக் குக்கரில் வைத்து குக்கரை ஆன் செய்யவும்.
சோறு தயாராக ஒரு 20 நிமிடம் ஆகும். அந்த நேரத்தில் சமையலறையைச் சுத்தம் செய்து, நேற்று இரவு சாப்பிட்ட சாப்பாட்டு பொட்டலம் மற்றும் மற்ற குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்து குளித்து விட்டு வரவும்.
குளித்து விட்டு வந்தால் சோறு தயாராக இருக்கும். குக்கரை ஆப் செய்துவிட்டு சாப்பிட ஆரம்பிக்கவும்!

தொட்டுக்கொள்வதற்கு முந்தாநாள் இரவு சப்பாத்திக்கு வைத்த தக்காளித் தொக்கை சுடவைத்து வைத்துக் கொள்ளவும்.
குறிப்புகள் சில:இந்த இடுகையை யார் வேண்டுமானாலும் மீள் பதிவு செய்து கொள்ளலாம். மீள் பதிவு செய்வோர் தயவு செய்து எங்கும் என் பெயரையோ அல்லது இந்த இடுகைக்கான தொடுப்பையோ சேர்த்துவிட வேண்டாம்..
இந்தக் குழம்பை யார் வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். ஆனால் செய்யத் தொடங்கும் முன் இங்கு வந்து நன்றி சொல்லிப் பின்னூட்டமிட்டுச் செல்லவேண்டும்
நீங்கள் சமைத்த குழம்பு நன்றாக இருந்தால் அதற்குறிய பாராட்டுக்கள் அனைத்தும் எனக்கே. ஆனால் நன்றாக இல்லையெனில், அது உங்களின் கவனக்குறைவால் மட்டுமே இருக்கும். எனவே விழும் திட்டுக்கள் அனைத்தும் உங்களுக்கே!
இந்த இடுகையில் இருக்கும் நுண்ணரசியல் என்ன என்பதைக் கண்டுபிடிப்போருக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான முட்டைக்கோஸ் சாம்பார் பரிசாக வழங்கப் படும்.